`அரசு வேலை வாங்கிதருவதாக மோசடி‘ - அதிமுக மாவட்ட செயலாளர், அவரது மனைவி மீது புகார்

`அரசு வேலை வாங்கிதருவதாக மோசடி‘ - அதிமுக மாவட்ட செயலாளர், அவரது மனைவி மீது புகார்
`அரசு வேலை வாங்கிதருவதாக மோசடி‘ - அதிமுக மாவட்ட செயலாளர், அவரது மனைவி மீது புகார்

அதிமுக-வின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாகக்கூறி, அவரது தம்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மற்றும் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோரின் இளைய சகோதரரான நல்லதம்பி என்பவர் வழக்கறிஞராகவும், அதிமுகவில் மாநில மாவட்ட அளவிலான பல்வேறு பொறுப்புகளில் வகித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் நல்லதம்பி.

இந்நிலையில், நல்லதம்பி தற்போது மற்றொரு புகாரை அளித்துள்ளார். அதில், `எனது சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி (முன்னாள் கொடைக்கானல் மதர் தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் 2011 முதல் 2016 வரை) ஆகிய இருவரும் சேர்ந்து பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பல்கலைக்கழகத்திலும் மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக சுமார் 40 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர்.

ஆனால், எந்தவித பணியும் யாருக்கும் வாங்கித் தரப்படவில்லை. எனவே, பணத்தை திருப்பித் தரும்படி கேட்ட பொழுது காத்திருக்கச் சொல்லியும், பல ஆண்டுகளாக இழுத்தடிப்புதாகவும் இருந்துள்ளனர். வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடியில் ஈடுபட்டு வரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரியுள்ளார். தனது புகாரை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனுவாக அவர் அளித்துள்ளார்.

புகார் மனு மீதான விசாரணை நடத்துமாறு சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நல்லதம்பி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இன்று சென்றார். தொடர்ந்து விசாரணையும் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர்கள் இடையே கருத்து மோதல்கள் இருந்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் மீது அவரது சகோதரர் பணமோசடி புகார் கொடுத்துள்ளது அதிமுக வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com