மருத்துவக் கல்லூரிகளில் டைம்டேபிள் போட்டு திருடிய இளைஞர்! காதல் தோல்வியால் விபரீத முயற்சி

மருத்துவக் கல்லூரிகளில் டைம்டேபிள் போட்டு திருடிய இளைஞர்! காதல் தோல்வியால் விபரீத முயற்சி
மருத்துவக் கல்லூரிகளில் டைம்டேபிள் போட்டு திருடிய இளைஞர்! காதல் தோல்வியால் விபரீத முயற்சி

இந்தியா முழுவதும் கால அட்டவணை போட்டு மருத்துவ கல்லூரிகளில் மட்டுமே லேப்டாப் திருடிய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 31 லேப்டாப்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி மருத்துவம் பயின்றுவரும் ருத்ரேஷ் என்ற மருத்துவக் கல்லூரி மாணவர் உட்பட 2 பேரின் லேப்டாப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்டது. இதுகுறித்து ருத்ரேஷ் அளித்த புகாரின் பேரில் சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இருந்த அனைத்து சிசிடிவி காட்சி பதிவுகளையும் ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் லேப்டாப்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

உடனடியாக லேப்டாப்பை திருடிச்செல்லும் நபர் குறித்து வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் யமுனா தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனிப்படை காவல்துறையினர், ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (25) எனத் தெரியவந்தது. மேலும் லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளில் பதிவான நபரின் உருவமும், பிடிபட்ட நபரின் உருவமும் ஒற்றுமையாக இருந்ததால் அவரை காவல்நிலையம் அழைத்துவந்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில், பிடிபட்ட நபர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவருக்கு தாய் தந்தை இல்லை என்பதும், இவர் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.ஏ பொருளாதார பிரிவில் பட்டப்படிப்பு படித்ததும், மேலும் தொலைதூர கல்வி மூலமாக பிஎல் படித்ததும் தெரியவந்தது. மேலும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்லூரி மாணவரின் லேப்டாப்பை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அவர்மீது சந்தேகம் காவல் துறையினர், நிலையில் தனிப்படை போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

பிடிபட்ட தமிழ்ச்செல்வன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி பயின்ற பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல், தோல்வியில் முடிவடைந்ததால் ஆத்திரத்தில் இருந்த தமிழ்ச்செல்வன், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளை காலண்டரில் அட்டவணை போட்டு ஒவ்வொரு கல்லூரிக்கும் தினமும் சென்று இரண்டு லேப்டாப்புகள் வீதம் டார்கெட் செய்து, லேப்டாப்களை திருடி அதன் வெளித்தோற்றத்தை மாற்றி ஓஎல்எக்ஸ் போன்ற பழையப் பொருட்கள் விற்பனை செய்யும் வலைதளத்தில் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.

செம்மஞ்சேரி பகுதியில் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று சோதனை செய்திருக்கின்றனர். அங்கு அவர் ஏற்கெனவே திருடி வைத்திருந்த 31 லேப்டாப்புகள் இருந்ததைப் பார்த்து அவற்றை பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும் அங்கிருந்த காலண்டரில் தினமும் ஒரு கல்லூரி என கல்லூரியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததும் போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது. உடனடியாக அவர்மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் காவல்துறை கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com