திருமணத்தை மீறிய உறவால், 2 குழந்தைகளை கொன்று புதைத்த இளம்பெண் - வெளியான அதிர்ச்சி தகவல்

திருமணத்தை மீறிய உறவால், 2 குழந்தைகளை கொன்று புதைத்த இளம்பெண் - வெளியான அதிர்ச்சி தகவல்
திருமணத்தை மீறிய உறவால், 2 குழந்தைகளை கொன்று புதைத்த இளம்பெண் - வெளியான அதிர்ச்சி தகவல்

சங்கரன்கோவில் அருகே திருமணத்தை மீறிய உறவு மூலம் பெற்ற 2 குழந்தைகளை, குழி தோண்டி இளம்பெண் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரி (38). இவருக்கும், வடநத்தம் பட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முத்துமாரி, திருமணத்தை மீறிய உறவு மூலம், கடந்த 2018-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து, அதை அங்குள்ள குளத்தில் வீசிவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், சேர்ந்தமரம் போலீசார், குளத்தில் கிடந்த குழந்தையை மீட்டு அடக்கம் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக தாய் முத்துமாரியை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு முத்துமாரிக்கு, மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், அதை தனது வீட்டுக்கு அருகிலேயே குழிதோண்டி புதைத்ததாகவும் தெரிகிறது.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளர் கருப்பசாமி அளித்த புகாரின் பேரில், சேர்ந்தமரம் போலீசார் தாய் முத்துமாரியையும், வடநத்தம்பட்டியைச் சேர்ந்த சசிகுமாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி குழந்தையை வெளியே எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக, பாளை மத்திய சிறையில் இருந்த சசிகுமாரையும், கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் இருந்த முத்துமாரியையும், போலீசார் இன்று நொச்சி குளத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில், வருவாய் துறை மற்றும் மருத்துவக்குழுவினர் முன்னிலையில், போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் குழியை தோண்டினர்.

குழிக்குள் உரச்சாக்கு பையில் இருந்த குழந்தையின் எலும்புத் துண்டுகளை வெளியே எடுத்து, அவற்றை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இளம்பெண் ஒருவர் திருமணத்தை மீறிய உறவு மூலம், தான் பெற்ற 2 குழந்தைகளை கொன்று புதைத்த சம்பவம் சங்கரன்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com