பெங்களூருவில் பார்க்கில் அமர்ந்திருந்த பெண்ணை இழுத்துச்சென்று ஓடும் காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் மார்ச் 25ஆம் தேதி நடந்துள்ளது. கோரமங்கலாவிலுள்ள தேசிய விளையாட்டு கிராம பூங்காவில் இரவு நேரத்தில் அந்த பெண் தனது நண்பருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இருவருக்கும் அருகே சென்று, அவர்களை நோட்டமிட்டதுடன், இரவு நேரத்தில் பார்க்கில் அமர்ந்து பேசக்கூடாது என மிரட்டியிருக்கிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் நண்பரை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியதால் அவர் சென்றிருக்கிறார். இதனையடுத்து அப்பெண்ணை மிரட்டிய நபர் தனது நண்பர்களை அங்கு அழைத்துள்ளார். உடனடியாக வெளியே காத்திருந்த 3 பேர் அங்கு வந்துள்ளனர். நான்கு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை அவர்களின் காரில் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
அடுத்தநாள் அதிகாலை, அப்பெண்ணை அவரின் வீட்டில் இறக்கி விட்டிருக்கின்றனர். மேலும், இதுபற்றி போலீசாரிடம் புகாரளித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிச் சென்றிருக்கின்றனர். இருப்பினும் அந்த பெண் இதுகுறித்து புகாரளித்ததைத் தொடர்ந்து போலீசார் 4 பேரை கைது செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து, பெங்களூரு சீனியர் காவல் அதிகாரி சி.கே பாபா கூறுகையில், “இதுகுறித்து நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.