திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராதுறை என்பவரது மகன் மோகன்ராஜ் (23). இவர் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி, திருமணம் செய்து கொள்வோம் என ஏமாற்றி கடந்த 2ம் தேதி இரவு சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் மறுநாள் காலை சிறுமியின் பெற்றோர் பெண்ணை காணவில்லை என பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர். பிறகு கடந்த 5ம் தேதி அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையில், மோகன்ராஜ் என்பவர் சிறுமியுடம் பழகி வருவது தெரியவந்தது.
இதையடுத்து மோகன்ராஜை போலீசார் தேடிவந்த நிலையில், பெண் காணாமல்போன அதே நாளில் மோகன்ராஜ் வேலைக்கு செல்வதாக கூறி சென்னை சென்றது தெரியவந்தது. பின்னர், மோகன்ராஜின் செல்போன் எண்ணை வைத்து சென்னையில் அவரை பிடித்த போலீசார் அவரிடமிருந்து சிறுமியை மீட்டுள்ளனர்.
இதற்கிடையில் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வோம் என மோகன்ராஜ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் கடத்தல் வழக்கை போக்சோ வழக்காக மாற்றி மோகன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.