சந்தேகத்தால் மனைவி கொலை : கணவரை கைது செய்த போலீஸ்..!
சென்னையில் மனைவியை கொலை செய்ததாக கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எம்கேபி நகர் 17வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது 2வது மனைவி ரமணி. இவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி சார்லஸ் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம்போல கணவன் - மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அப்போது வீட்டில் இருந்த கத்தியால் மனைவி ரமணியை சார்லஸ் குத்தி கொலை செய்ததாக தெரிகிறது. சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சார்லஸ் ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் ரமணி உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.