சென்னை: குடிக்க பணம்கேட்டு தொல்லை செய்த கணவனால் மனைவி எடுத்த விபரீத முடிவு

சென்னை: குடிக்க பணம்கேட்டு தொல்லை செய்த கணவனால் மனைவி எடுத்த விபரீத முடிவு
சென்னை: குடிக்க பணம்கேட்டு தொல்லை செய்த கணவனால் மனைவி எடுத்த விபரீத முடிவு

குடிப்பதற்கு பணம் கேட்டுக் கணவன் தந்த தொல்லையால் மனமுடைந்த மனைவி கணவன் கண் எதிரிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த கணவன்மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் எம்.ஜி.ஆர் நகர் 6வது தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன் (38). அவரது மனைவி ஜீவா(32). இவர்களுக்குத் திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 13 வயதில் கெளதம் மற்றும் 11 வயதில் பிரதாப் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.

வெங்கடேசன் எப்போதாவதுதான் கூலி வேலைக்குச் செல்வார். அதனால் ஜீவா வீட்டு வேலைக்குச் சென்று அந்த வருமானத்தில்தான் குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார். இதற்கிடையே வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு ஜீவாவிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி இரவு 8 மணிக்கு வெங்கடேசனுக்கும் மனைவி ஜீவா இருவருக்கும் இடையே வழக்கம்போல் சண்டை ஏற்பட்டுள்ளது.

வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் மீண்டும் குடிக்க பணம் கேட்டு வெங்கடேசன் சண்டையிட்டுள்ளார். மனமுடைந்த ஜீவா கணவன் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதைப் பார்த்த இளைய மகன் பிரதாப், பம்மல் பகுதியில் உள்ள தனது அத்தை மேகலா என்பவரை தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு தனது அம்மா மயங்கிய நிலையில் கிடப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மேகலா சம்பவ இடத்திற்கு வந்து ஜீவாவை ஆட்டோவில் ஏற்றி பம்மல் அண்ணா சாலையில் உள்ள தனியார் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மருத்துவர்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் கூறவே, அங்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் ஜீவாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனவும் கழுத்தில் தூக்கிட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், உடனே இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார், இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி வெங்கடேசனை கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் கண் எதிரே மனைவி தூக்கிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார் வெங்கடேசன். இதனால் அவர்மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். ஜீவாவின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த போலீசார் அவருடைய பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர். குடி குடியை கெடுக்கும் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சான்று.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com