போக்சோ வழக்கில் கைதான போலி நிருபருக்கு 17 ஆண்டுகள் சிறை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி நிருபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி தேர்வில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றதையடுத்து அவரின் படங்கள் அனைத்து நாளிதழ்களிலும் வெளியாயின. அதை பார்த்த விருதுநகரைச் சேர்ந்த கண்ணன் என்கிற விஜய கண்ணன் அருப்புக்கோட்டைக்கு சென்று மாணவியின் பெற்றோரிடம் தான் மத்திய அரசாங்க தொலைக்காட்சியின் (பொதிகை) நிருபர் என்று அறிமுகமானார்.
பின்னர், முதலிடம் பெற்ற மாணவிக்கு கலெக்டரிடம் சொல்லி பணம் வாங்கித் தருவதாக கூறி விருதுநகருக்கு அழைத்து வந்து தொடர்ந்து அவரை அங்கிருந்து மதுரை அழைத்துச் சென்று பின் பேருந்தில் திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து மாணவியை காணாமல் தவித்த பெற்றோர், விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து கண்ணனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து கண்ணன் என்கிற விஜய கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்த விருதுநகர் பஜார் காவல்நிலைய போலீசார், அவரை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கண்ணன் என்ற விஜய கண்ணனுக்கு 7 வருடம் மற்றும் 10 வருட சிறை தண்டனை என மொத்தமாக 17 வருடங்கள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி தனசேகரன் தீர்ப்பளித்தார்.