விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாதந்தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால், நேற்றைய நிகழ்வைக் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், சோதனைச் சாவடிகள் அமைத்த காவல்துறையினர் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தகவலானது மக்களுக்கு முழுமையாக சென்றடையாத காரணத்தால், வெளியூரிலிருந்தும் மக்கள் கோயிலுக்கு வருகைத் தந்ததாகத் தெரிகிறது. அப்போது மதுப்போதையில் வந்த 4 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த விசாரணையில், சம்பந்தப்பட்ட மூவரை கைது செய்த அதிகாரிகள், எஞ்சிய ஒருவரைத் தேடி வருகின்றனர்.