ஆம்பூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் பங்களா மேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27) இவரது மனைவி நந்தினி (23) இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், விக்னேஷ் தனது குடும்பத்தினருடன் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் உள்ள நந்தினியின் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த ஊரில் உள்ள கெங்கையம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையடுத்து நேற்று காலை விக்னேஷ் நந்தினி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் துப்பட்டாவால் நந்தினியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர், நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
இந்நிலையில், அப்பகுதி மக்கள் விக்னேஷை சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து விக்னேஷை கைது செய்த காவல்துறையினர் அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் திருமணம் செய்து மனைவியின் கழுத்தை நெறித்து கணவன் கொலை செய்த நிகழ்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.