ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து
வேலூர் மாவட்டம் கதம்பம் பட்டி பகுதியை சேர்ந்த மாணவி லாவண்யா. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை
விவசாயம் படித்து வருகிறார். இவர் சிதம்பரத்தில் உள்ள தாமரை விடுதியில் தங்கியிருந்தார்.
இன்று காலை 10 மணி அளவில் விடுதியில் இருந்து மாணவி லாவண்யா வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று லாவண்யாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். உடனே மாணவி கூச்சல்போட்டு அலறியதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கற்களை கொண்டு அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி முயன்றுள்ளார். ஆனால்
அங்கிருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே கழுத்து அறுக்கப்பட்ட மாணவி லாவண்யா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே மற்ற மாணவிகள் அவரை மீட்டு
சிதம்பரம் மருத்துவக்கல்லாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர் வேலூர் மாவட்டம் கதம்பம்பட்டியை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான அவர்,
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். லாவண்யாவும், நவீனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.
லாவண்யாவை அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை லாவண்யா ஏற்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நவீன் இன்று காலை லாவண்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.