எம்எல்ஏ சீட் வாங்கித்தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

எம்எல்ஏ சீட் வாங்கித்தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

எம்எல்ஏ சீட் வாங்கித்தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கித்தருவதாகக் கூறி 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கில் மத்திய இணை அமைச்சரின் முன்னாள் உதவியாளர் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் புவனேஷ் குமார்(29). இவர் பாஜகவில் ஆரணி நகரத் தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஆரணி தொகுதியில் நிற்க சட்டமன்ற உறுப்பினர் சீட்டு கேட்டு சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வடசென்னை மாவட்ட அதிமுக நிர்வாகியான விஜயராமனை அணுகியுள்ளார்.

இதனையடுத்து விஜயராமன் அப்போதைய பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய இணை அமைச்சருமான கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளரான நரோத்தமனிடம் சட்டமன்ற உறுப்பினர் சீட்டு குறித்து கேட்டுள்ளார். இதனையடுத்து அவர் சட்டமன்ற உறுப்பினர் சீட்டு வாங்கித் தருவதாக புவனேஷ் குமாரிடம் உறுதியளித்ததுடன், அதற்கு 1 கோடி ரூபாய் தரவேண்டும் எனவும் அவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து புவனேஷ் குமார் முதல் தவணையாக 50 லட்சம் ரூபாய் பணத்தை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து நரோத்தமன் தந்தை சிட்டிபாபு மற்றும் விஜயராமன் முன்னிலையில் நரோத்தமனிடம் கொடுத்துள்ளார்.

புவனேஷ் குமாரின் பெயர், பட்டியலில் இடம்பெற்றவுடன் மீதமுள்ள 50 லட்சம் ரூபாய் பணத்தையும் தர வேண்டும் எனக்கூறி அனுப்பியுள்ளனர். தேர்தலின் போது பெயர் பட்டியலில் புவனேஷ் குமாரின் பெயர் வராத நிலையில், சந்தேகமடைந்த அவர் நரோத்தமனிடம் தனது பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பணத்தை தர மறுத்து இழுத்தடித்ததால் பாஜக மத்திய உள்துறை இணை அமைச்சரான கிஷன் ரெட்டியிடம் இது குறித்த தகவலை புவனேஷ் தெரிவித்துள்ளார்.

அப்போது கிஷன் ரெட்டியும் பணத்தை உடனடியாக திருப்பி செலுத்துமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மூவரும் புவனேஷ் குமாரிடம் இருந்து பெற்ற பணத்தை திருப்பித் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததுடன், பணத்தைத் திருப்பிக் கேட்ட புவனேஷ் குமாருக்கு மூவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் புவனேஷ் குமார் தனது 50 லட்சம் பணத்தை மீட்டு, தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பாண்டிபஜார் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தார். இதனையடுத்து பாண்டி பஜார் போலீசார் மோசடி, கூட்டு சதி உட்பட 4 பிரிவுகளின் கீழ் மத்திய உள்துறை இணை அமைச்சரின் முன்னாள் உதவியாளரான நரோத்தமன், அவரது தந்தை சிட்டிபாபு, விஜயராமன் மற்றும் அவரது மகன் சிவ பாலாஜி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அந்த 4 பேரும் தலைமறைவானதால் அவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த மத்திய இணை அமைச்சரின் முன்னாள் உதவியாளர் நரோத்தமன் மற்றும் அவரது தந்தை சிட்டி பாபு ஆகியோர் ஹைதராபாத்தில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, டிரான்சிட் வாரண்டு பெற்று சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள விஜயராமன் மற்றும் சிவ பாலாஜி ஆகிய இருவரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com