
தமிழக கேரள எல்லைப் பகுதியான போடிமெட்டு மணப்பட்டியில் இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சட்டவிரோத மது விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால் இவர்கள் இருவரும் கொல்லபட்டதாக கூறப்படுகிறது.
டாப் ஸ்டேஷன் பகுதியில் சிலர் டாஸ்மாக் மதுபானங்களை கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்வது குறித்து கூலித் தொழிலாளர்களான சரவணன் மற்றும் ஜான் பீட்டர் ஆகியோர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் போடிமெட்டு மணப்பட்டி அருகே இரண்டு உடல்கள் கிடப்பதை கண்ட வாகன ஓட்டிகள் சிலர், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்று சடலங்களை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் கூலிப்படையை ஏவி அந்த இருவரையும் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.