திருச்சி: நகைக்கடை ஊழியர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - 1.3 கிலோ நகை சிக்கியது

திருச்சி: நகைக்கடை ஊழியர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - 1.3 கிலோ நகை சிக்கியது

திருச்சி: நகைக்கடை ஊழியர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - 1.3 கிலோ நகை சிக்கியது
Published on

திருச்சியில் நகைக் கடை ஊழியரை கொன்று உடல் புதைக்கப்பட்ட சம்பவத்தில், 7 பேர் கைது செய்யப்பட்டதோடு, 50 மணி நேரத்திற்கு பின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

உறையூர் புத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகன் மார்டீன் ஜெயராஜ் (42). இவருக்கு ரூபா என்ற மனைவியும் 12 வயதிற்குட்பட்ட இரு குழந்தைகளும் உள்ளனர். இவர், திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிரணவ் நகைக் கடையில், நகைகளை கொள்முதல் செய்பவராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி சென்னையில் உள்ள சௌகார்பேட்டை பகுதியில் நகைகளை வாங்க ஏற்கெனவே இதே நகைக் கடையில் பணியாற்றிய சீரங்கம் மாம்பலசாலை பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் பிரசாந்தை (26) அழைத்துக் கொண்டு இருவரும் காரில் சென்னைச் சென்றுள்ளனர். அதன்பிறகு நகைகளை கொள்முதல் செய்து அன்று மாலையே திருச்சிக்கு புறப்பட்டனர். ஆனால், இரவு வெகு நேரமாகியும் மார்ட்டீன் ஜெயராஜ் திருச்சி வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

நகைக் கடை ஊழியர் 1.5 கிலோ நகைகளுடன் மாயமானதை தொடர்ந்த கடையின் உரிமையாளர் செல்வராஜின் மகன் மதன் (42) உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கார் ஓட்டுநர் பிரசாந்த்தின் செல்போன் டவர் மூலம் அறிந்து பிரசாந்த்தை கைது செய்த போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில் பிரசாந்த் கூறும்போது, “நான் ஏற்கெனவே பிரணவ் நகை கடையில் வேலை செய்தபோது எனக்கு குடி பழக்கம் அதிகம் இருந்ததை கடை உரிமையாளரிடம் மார்டீன் ஜெயராஜ் கூறியதால் வேலையை இழந்தேன். நான் நகைக்கடையில் வேலையில் இருந்தபோது நல்ல வருவாய் கிடைத்தது. இதன் மூலம் இரண்டிற்கும் மேற்பட்ட கார்களை வாங்கி டிராவல்ஸ் நடத்தி வந்தேன். இப்போது போதிய வருவாய் இல்லாததால் அதிகளவில் கடன் ஏற்பட்டதாகவும், மீண்டும் நகைக் கடையில் வேலைக்கு சேர முயன்ற போது அதற்கு மார்ட்டீன் ஜெயராஜ் தடையாக இருந்தார்.

இதனால் அவர் மீது கோபம் ஏற்பட்டதால் நண்பர்கள் உதவியுடன் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி சம்பவதன்று கார் உளுந்தூர் பேட்டை அருகே வந்தபோது, நான் ஏற்கெனவே திட்டமிட்டதன் பேரில் எனது நெருங்கிய நண்பர்கள் 6 பேர் கொண்ட கும்பல் உளுந்தூர் பேட்டை வந்து, மார்டீன் ஜெயராஜை காரிலே வைத்து கழுத்தில் குத்திக் கொலை செய்தனர். பின்னர், மார்டீன் ஜெயராஜ் வைத்திருந்த 1.5 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு மார்டீன் உடலை திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே அழகிய மணவாளம் கிராமத்தில் உள்ள தோப்பில் புதைத்து விட்டு அனைவரும் தலைமறைவாக இருந்தோம் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து மாம்பலசாலை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் வீட்டில் இருந்த 1.3 கிலோ தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். கொலைக்கு மூளையாக செயல்பட்ட, இவரது நண்பர் கல்க்கண்டார்கோட்டை அருகே கீழகுறிச்சி பகுதியைச் சேர்ந்த பொன்னார் மகன் பிரசாந்த் மற்றும் மண்ணச்சநல்லூர் அருகே அழகிய மணவாளம் கிராமத்தைச் சேர்ந்த பிரவின் (20), செல்வகுமார் (19), மாணிக்கம் என்பவரின் மகன்கள் அரவிந்த (23), அறிவழகன் (20), விக்ரம் (19) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் மலர் முன்னிலையில் திருச்சி அரசு பொது மருத்துவமனை சட்டம் மற்றும் தடவியல் மருத்துவர் செல்வகுமார் தலைமையிலான 3 மருத்துவர்கள் சுமார் 2 மணி நேரம் உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர், மார்டீன் ஜெயராஜ் உடலை அவரது மனைவி ரூபா மற்றும் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com