மத்தியப்பிரதேசத்தில் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவரை, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்எல்ஏவின் கணவரும் அவரது நண்பர்களும் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
பாரதிய ஜனதா கட்சியின் பெண் எம்எல்ஏ சங்கீதா சாரல் தனது கணவர் விஜய் சாரல் உடன் வாகனத்தில் சென்றுள்ளார். அவர்களின் வாகனம் ரட்லம் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நுழைந்த போது பணம் கேட்டிருக்கிறார்கள். விஜய் சாரல் பணம் செலுத்த முடியாது என்று அங்கிருந்த ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விஜய் அங்கிருந்த ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அவருடன் வந்த நண்பர்களும் சேர்ந்து ஊழியர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் ஊழியரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.