திருவள்ளூர்: பட்டாக் கத்தியுடன் பொதுமக்களை விரட்டிய 4 பேர் கைது

திருவள்ளூர்: பட்டாக் கத்தியுடன் பொதுமக்களை விரட்டிய 4 பேர் கைது
திருவள்ளூர்: பட்டாக் கத்தியுடன் பொதுமக்களை விரட்டிய 4 பேர் கைது

திருவள்ளூர் அருகே நண்பனின் பிறந்தநாளை கொண்டாட ஆட்டோவில் சென்ற 4 பேர் சாலையோர சுவற்றின்மீது மோதி விபத்து ஏற்பட்டது. விசாரிக்க சென்றவர்களை பட்டாக்கத்தியுடன் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையிலிருந்து திருவள்ளூர் நோக்கி 2 ஆட்டோவில் சென்ற 4 பேர் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். இவர்கள், தொழுவூர் பகுதியில் சென்றபோது சாலையோரத்தில் உள்ள காம்பவுண்டு சுவர் மீது மோதியுள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் கேட்டபோது ஆட்டோவில் இருந்தவர்கள், பட்டாக்கத்தியை எடுத்து விசாரிக்க வந்தவர்களை விரட்டியுள்ளனர். கத்தியுடன் விரட்டிச் செல்வதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அந்த 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து அவர்களை அருகிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர்கள் கரையான்சாவடியைச் சேர்ந்த புவனேஷ்வர், வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ஐயப்பன் என்பதும் இவர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பட்டாக் கத்தியுடன் வந்த 4 இளைஞர்களும் எதற்காக வந்தார்கள்?  யாரையாவது கொலை செய்ய வந்தார்களா அல்லது வழிப்பறி செய்ய வந்தார்களா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் கொடி கட்டி பறப்பதால் கஞ்சா விற்பனைக்காக வந்தார்களா எனவும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com