கர்நாடகா | இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு.. 3 பேருக்கு தூக்கு!
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில், 2025 ஆம் ஆண்டு ஹம்பியில் நடந்த கொடூர சம்பவத்தில், மூன்று ஆண்கள் சுற்றுலாப் பயணிகளை தாக்கி, பெண்களை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தனர். இளைஞர் பிபாஸ் குமார் நாயக் கற்களால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீதிமன்றம் மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில், கடந்த 2025 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 27 வயது பெண் உட்பட 4 பேர், ஹம்பியிலுள்ள ஒரு விடுதியின் பெண் மேலாளருடன் மார்ச் 6ஆம் தேதி இரவு, ஹம்பியில் உள்ள சனாப்பூர் ஏரியை பார்வையிடச்சென்றனர். அப்போது, மதுபோதையில் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் அந்தப் பகுதியில் வந்துள்ளது. தொடர்ந்து, இந்தக் கும்பல் முதலில் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அங்கு இருந்த மூன்று ஆண்களையும் ஆற்று வாய்க்காலில் தள்ளிவிட்டு, இரண்டு பெண்களையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தனர்.
இதில் ஒடிசாவைச் சேர்ந்த பிபாஸ் குமார் நாயக் என்ற இளைஞர், பெண்களைக் காப்பாற்ற முயன்றபோது கற்களால் தாக்கப்பட்டு ஆற்றில் தள்ளிவிடப்பட்டார். அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்ற இரு ஆண்கள் நீந்தி உயிர் தப்பினர். இதையடுத்து காவல்துறையினர் சம்பத்தப்பட்ட மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. அதில், இவர்கள் ஏற்கெனவே பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்பதும் பகலில் தினசரி ஊதியம் பெறும் தொழிலாளிகளாக பொதுவெளியில் தங்களைக் அடையாளப்படுத்திக் கொண்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வந்த கொப்பல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், பிப்ரவரி 6-ஆம் தேதி இவர்களைக் குற்றவாளிகள் என அறிவித்தது.
இந்த நிலையில் தான், இன்று தண்டனை விவரங்களை வெளியிட்ட கொப்பள் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, இது "அரிதிலும் அரிதான வழக்கு" எனக் குறிப்பிட்டு, இந்த குற்றச்சம்பவத்தில் சம்மத்தப்பட்ட மல்லேஷ் (22), சாய் (21), சரபாசவராஜ் (27) ஆகிய மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

