கஞ்சா போதையில் ஆந்திர வாலிபரை வெட்டிவிட்டு செல்போனை பறித்துச்சென்ற மூன்று பேர் கைது

கஞ்சா போதையில் ஆந்திர வாலிபரை வெட்டிவிட்டு செல்போனை பறித்துச்சென்ற மூன்று பேர் கைது
கஞ்சா போதையில் ஆந்திர வாலிபரை வெட்டிவிட்டு செல்போனை பறித்துச்சென்ற மூன்று பேர் கைது

கஞ்சா போதையில் ஆந்திர வாலிபரை வெட்டிவிட்டு செல்போனை பறித்துச்சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் தப்பியோடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளன.

ஆந்திராவைச் சேர்ந்த பூபால அசோக் சென்னையில் உள்ள தோழியை சந்திப்பதற்காக கடந்த 30ஆம் தேதி சென்னைக்கு வந்திருக்கிறார். பின்னர் அன்று மாலை பூபால் அசோக் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் தோழியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது டிக்கெட் கவுண்டர் அருகே இருந்த கழிவறைக்கு பூபால அசோக் சென்றபோது, அவரை பின்தொடர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை மிரட்டி செல்போனை கேட்டுள்ளனர். செல்போனை தரமறுத்ததால் பூபால அசோக்கின் கை, காலில் வெட்டிவிட்டு செல்போனை பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.

ரத்த காயத்துடன் இருந்த பூபால அசோக்கை மீட்ட ரயில்வே போலீசார் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பறித்து சென்ற செல்போன் அவரது தோழியுடையது என தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர். சிசிடிவியில் பதிவான அடையாளங்களை வைத்து பழைய குற்றவாளிகள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட திருவான்மியூரை சேர்ந்த பாலா, மகேஷ், அசோக் நகரை சேர்ந்த நிர்மல் ஆகிய மூன்று பேரும் அடையாறு கரையோரம் பதுங்கி இருந்தபோது ரயில்வே தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா போதையில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது, அந்த வழியாக வந்த அசோக்கை பிடித்து செல்போனை கேட்டதாகவும், தர மறுத்ததால் கத்தியால் வெட்டிவிட்டு செல்போனை பறித்து சென்றதாகவும் ஒத்துக்கொண்டுள்ளனர். மேலும் பறித்த செல்போனை ஆற்றில் தூக்கி வீசியதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பாலா, மகேஷ் மீது ஏற்கெனவே கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட மூவரும், அசோக்கை வெட்டி செல்போனை பறித்துவிட்டு சைதாப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com