ரேஷன் அரிசியை வீடுகளில் பதுக்கி வைத்து லாரியில் கடத்த முயன்றதாக இருவர் கைது. 12 டன் மதிப்பிலான 300 மூடை ரேஷன் அரிசியை வருவாய் மற்றும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாக ரேசன் அரிசியை வீடுகளில் பதுக்கி வைத்து கடத்துவதாக பெரியகுளம் வட்டாட்சியர் காஷா ஷெரிப்பிற்கு ரகசிய புகார் வந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவர், லட்சுமணன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசியை லாரிகளில் ஏற்றும்போது கையும் களவுமாக பிடித்தார்.
பெரியகுளம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து கடத்தப்பட்டு வீடுகளில் பதுக்கி வைக்கபட்டிருந்த அரிசியை பட்டை தீட்டி பின்னர் லாரியில் ஏற்றும் போது பிடிபட்டது முதல்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. மிகப்பெரிய அளவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் நடத்துள்ளதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்கானிப்பாளர் கீதா விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பாக அரிசி மாஃபியா கும்பலைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட லாரியின் ஒட்டுநர் சத்யநாராயணனை ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இதில் தொடர்புடைய 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பெரியகுளம் தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி பாலமுருகன் கூறுகையில் "அரிசி கடத்தல் தொடர்பாக ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார். தேனி மாவட்டத்தில் அரிசி கடத்தல் தங்கு தடையின்றி நடந்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.