சிறுமிக்கு திருமணமாகி குழந்தை பிறந்ததில் தகராறு! சமாதானம் செய்ய சென்றவர் குத்திக்கொலை!

சிறுமிக்கு திருமணமாகி குழந்தை பிறந்ததில் தகராறு! சமாதானம் செய்ய சென்றவர் குத்திக்கொலை!
சிறுமிக்கு திருமணமாகி குழந்தை பிறந்ததில் தகராறு! சமாதானம் செய்ய சென்றவர் குத்திக்கொலை!

தேனி அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறந்த விவகாரத்தில், சைல்டு லைன் விசாரணையால் இரு குடும்பத்தினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பானுகோவன் மகன் பொன்வண்ணன். இவருக்கு வயது 26. இவர் 17 வயது சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சிறுமி கர்ப்பமடைந்து பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருமண வயது பூர்த்தியடையாத சிறுமி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை சைல்டு லைன் அமைப்பிற்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சைல்டு லைன் சார்பில் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்த பின், சிறுமி அவரது தந்தை வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று சிறுமியின் வீட்டிற்கு சென்ற சிறுமியின் கணவர் பொன்வண்ணன், தாய் - சேய் இருவரையும் தனது வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சைல்டு லைன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குழந்தை பிறந்த 20 நாட்களே ஆனதால் சிறுமியை அவரது பெற்றோர் அனுப்ப மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பொன்வண்ணன், சிறுமி மற்றும் சிறுமியின் தாயாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்னை குறித்து சமாதானம் பேசுவதற்காக சிறுமியின் தந்தை கண்ணன், அவரது மகன் கிஷோர், உறவினர்களான போடிநாயக்கனூர் புதூரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மனோஜ்(30), பெரியகருப்பன் மகன் கிருஷ்ணன்(55) ஆகியோர் பொன்வண்ணனின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் தந்தை கண்ணன் தரப்பினருடன் சிறுமியின் கணவன் பொன்வண்ணன், அவரது சகோதர் கார்த்திக் ஆகியோர் தகராறு செய்துள்ளனர். அப்போது சிறுமியின் தந்தையான கண்ணன் மற்றும் அவருடன் வந்த கண்ணன், கிஷோர், கிருஷ்ணன் 3 பேரை பொன்வண்ணன், கத்தியால் சராமரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மனோஜ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கண்ணன், கிஷோர், கிருஷ்ணன் ஆகிய 3 பேர் காயமடைந்து தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து, சிறுமியின் கணவர் பொன்வண்ணன், அவரது சகோதரர் கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு குடும்பத்தினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்றவர் குத்தி கொலை செய்யப்பட்ட அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com