மது அருந்த பணம் தர மறுத்த தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகன்?
சிவகாசி அருகே மது அருந்த பணம் தர மறுத்த தாயை கழுத்தை நெறித்து மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே உள்ள செங்கமல நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரியின் மகன் அருணாச்சலப் பாண்டி. இவர் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தாய் ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபடுவார்.
இந்நிலையில், அருணாச்சலப் பாண்டி நேற்று இரவு தனது தாய் ஈஸ்வரியிடம், மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஈஸ்வரி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருணாச்சலப் பாண்டி தாயை அடித்துள்ளார். பின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் அருணாச்சலப் பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.