திருச்சி அரசுக் கல்லூரி பேராசியர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. முதல்வர் அனுப்பிய அறிக்கை!

திருச்சி அரசுக் கல்லூரி பேராசியர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. முதல்வர் அனுப்பிய அறிக்கை!
திருச்சி அரசுக் கல்லூரி பேராசியர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. முதல்வர் அனுப்பிய அறிக்கை!

பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி,  கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு விசாரணை அறிக்கையை அனுப்பியுள்ளார் திருச்சி தந்தை பெரியார் அரசுக் கல்லூரி முதல்வர்.  

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.ஏ. படித்த மாணவி ஒருவர், தன்னுடைய பேராசியர்  தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு துன்புறுத்தல்கள் செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வரும் சூழலில், முதலமைச்சரின் தனி பிரிவிற்கு இது தொடர்பாக புகார் ஒன்றை கடந்த ஜூன் மாதம் அனுப்பினார். புகாரைத் தொடர்ந்து முதல்வரின் தனிப் பிரிவிலிருந்து இப்புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கல்லூரி முதல்வருக்கு கடிதம் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் இதற்கான குழு அமைத்து விசாரணை நடத்தியதாகவும் விசாரணையில் சம்பந்தப்பட்ட புகாருக்குள்ளான பேராசியர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு விசாரணை அறிக்கையை கடந்த மூன்றாம் தேதி தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த கல்லூரி முதல்வர் சுகந்தி கூறுகையில், ''கடந்த மார்ச் மாதம் அந்த பேராசிரியர் மீது ஸ்டெல்லா என்ற பெயரில் புகார் கடிதம் வந்தது. ஆனால் ஸ்டெல்லா என்கிற பெயரில் மாணவிகள் யாரும் அத்துறையில் பயிலவில்லை. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஆங்கில துறையில் எம்ஏ படித்த மாணவி ஒருவர், அந்த பேராசிரியர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதுதொடர்பாக எஸ்சி, ஒசி, பிசி பேராசிரியர் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டதில் பேராசிரியர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு கடந்த 3ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து கல்லூரியின் பெயரையும் அரசின் பெயரையும் காக்கும் வகையில் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்யாவிட்டாலும், பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் எப்பொழுதும் போல் கல்லூரிக்கு வந்து மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார். இது தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரிடம் நாம் சென்று கேட்டபோது, தான் ஒரு பட்டியலினத்தவர் என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டை தன் மீது சுமத்துவதாகவும், அனுபவம் வாய்ந்த தனக்கு பணி உயர்வு கிடைக்க உள்ள நிலையில் அது கிடைக்காமல் இருப்பதற்காக இதுபோன்ற புகார்கள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் அவர், புகார் தெரிவித்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சக மாணவிகளிடம் தெரிவித்து வந்ததாகவும், இதுகுறித்து மாணவியின் பெற்றோரிடம் மனநல ஆலோசனை வழங்குமாறு தெரிவித்த நிலையில், தற்போதுதான் தன் மீது இத்தகைய குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாகவும் கூறினார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை முற்றிலும் மறுப்பதாக தெரிவித்த பேராசிரியர், உரிய விசாரணையை மேற்கொண்டு தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

ஒரு பக்கம் மாணவி பாலியல் குற்றச்சாட்டு தெரிவிப்பதும், மற்றொரு பக்கம் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற குற்றச்சாட்டுகள் தன்மீது வைக்கப்படுவதாக பேராசிரியர் தெரிவித்து வரும் நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கல்லூரி கல்வி இயக்குனர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை குறித்து நிரூபணம் ஆகும்.

இதையும் படிக்க: நெல்லை: பணகுடி பகுதியில் தொடரும் குழந்தை திருமணம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com