ஆபாசமாக வீடியோ எடுத்து நகை பறித்த வழக்கு - அதிரடி முடிவு எடுத்த வழக்கறிஞர்கள்..!
இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில், பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் வசித்துவரும் திருநாவுக்கரசு என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டது. கனிவோடு பழகிய திருநாவுக்கரசு மீது நன்மதிப்பு ஏற்பட்டதால், அந்த பெண் அவரோடு நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறிய திருநாவுக்கரசு, அந்த பெண்ணை கடந்த 12-ஆம் தேதி காரில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. ஊஞ்சபேலம்பட்டி என்ற இடத்தில் காரில் ஏறிக் கொண்ட நண்பர்கள், அந்த பெண்ணை தங்களின் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து அதைவைத்து அப்பெண்ணிடம் இருந்த நகையை மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு தலைமறைவாக உள்ள நிலையில், காவலர்கள் அவரைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து நகை பணம் பறித்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க கூடிய வகையில் சாதாரண பிரிவின் கிழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது எனவும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக குற்றவாளிக்கு ஆதரவாக பொள்ளாச்சி வழக்கறிஞர் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராக போவதில்லை என்றும், வேறு மாவட்டத்தில் இருந்து வழக்கறிஞர்கள் ஆஜராக வந்தாலும் தடுத்து நிறுத்துவோம் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.