தஞ்சாவூர்: பொதுமக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதியில் ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை
பட்டுக்கோட்டையில் பொது மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெரு பகுதி எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆகும். இப்பகுதியில் பட்டுக்கோட்டை கண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (35). இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ள நிலையில் இவரை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஓட ஓட விரட்டி தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே சிரஞ்சீவி பலியானார்.
பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ரவுடி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் போலீசார் வெட்டி கொலை செய்யப்பட்ட சிரஞ்சீவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரவுடி சிரஞ்சீவியை வெட்டி கொன்றவர்கள் யார் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்குள் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோல் தொடர் கொலைகள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.