புதுச்சேரியில் கோயில் நிர்வாகி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் மாடவீதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அங்குள்ள கோயில் ஒன்றுக்கு நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டன் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் மணிகண்டனை வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக மணிகண்டனை வெட்டியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலறிந்து வந்த வில்லியனூர் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கோயில் இடத்தை பராமரிப்பது தொடர்பாக மணிகண்டனுக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததுள்ளது. இதன் காரணமாகவே மணிகண்டன் கொலை செய்யபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.