கரூரில் பள்ளி மாணவனை உடற்கல்வி ஆசிரியர் கத்தியால் குத்தியதாக புகார் எழுந்துள்ளது. வயிறு, நெஞ்சு ஆகிய பகுதிகளில் காயம்பட்ட மாணவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கரூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவர் ஹிதிக்கூர் ரஹ்மான். கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஹிதிக்கூர் ரஹ்மான் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் பேச்சையும் மீறி பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவன் ரஹ்மானுக்கும் உடற்கல்வி ஆசிரியருக்கும் திடீரென பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அப்போது இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளனர். அந்த நேரத்தில் ஆசிரியர் பன்னீர்செல்வம், மாணவன் ரஹ்மானை கத்தியால் இடுப்பு, நெஞ்சுப் பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. ஆசிரியருக்கும் கைகளில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மாணவன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்., ஆசிரியர் பன்னீர்செல்வமும் மாணவன் தன்னை கத்தியால் குத்தியதாகக் கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.