தஞ்சை: ஆஃப் பாயில் போட தாமதம்; உணவகத்தை சூறையாடிய இரு காவலர்கள் சஸ்பெண்ட்
ஆஃப் பாயில் போட தாமதமானதால் போதையில் ஹோட்டலை சூறையாடிய காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை தலைமைக் காவலரான பாலசுப்பிரமணியன் என்பவரும், திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அருண்குமார் என்பவரும் தங்கள் நண்பர் விஜி என்பவருடன் இணைந்து நாஞ்சிபேட்டை சாலையிலுள்ள ராம்குமார் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் சாப்பிடும்போது ஆஃப் பாயில் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஃப் பாயில் வர காலதாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த மூவரும் ஹோட்டலில் சப்ளை செய்த 15 வயது சிறுவனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனை ராம்குமார் தலையிட்டு தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மூவரும் ஹோட்டலில் உள்ள பொருட்களை உடைத்து சூறையாடினர். இதில், ஹோட்டல் உரிமையாளர் மனைவியின் கையில் காயம் ஏற்பட்டது. அதேபோல் காவலர் அருண்குமாருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காவலர்கள் பாலசுப்பிரமணியன், அருண்குமார் மற்றும் அவரது நண்பர் விஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, காவலர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய எஸ்பி ரவளிபிரியா உத்தரவிட்டுள்ளார். தலைமறைவாக உள்ள விஜியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்: காதலுக்கு எதிர்ப்பு: காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி