திருமணத்தை மீறிய உறவு: வீடியோ எடுத்து மிரட்டியதாக 3 பேர் கைது
திருமணத்தை மீறிய உறவை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த இளைஞர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை அருகே வல்லம் மின்நகர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மகன் முபாரக் (25). முகமது அலி புருனே நாட்டில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த வசந்தன் என்பவரின் மனைவி சாந்தா (42) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் புருனேயில் இருந்த போது முபாரக்கிற்கும் சாந்தாவிற்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் நெருக்கமாக இருந்ததை முபாரக் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் வீடியோவை காட்டி சாந்தாவை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வல்லம் தேவாரம் நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் தினேஷ் (30), மின்நகரைச் சேர்ந்த அன்பு என்பவரின் மகன் தினேஷ் (26) ஆகியோரின் வங்கிக் கணக்கில் பணம் போடச் சொல்லி மிரட்டிய நிலையில், ரூ.40 ஆயிரம் பணத்தை முபாரக் நண்பர்கள் வங்கி கணக்கில் சாந்தா செலுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நெருக்கமாக உள்ள வீடியோவை உன் கணவருக்கு அனுப்பி விடுவேன். சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று முபாரக் தொடர்ந்து மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சாந்தா, இதுகுறித்து வல்லம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பு மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக், தினேஷ், மற்றொரு தினேஷ் என மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.