'நான் பேருந்தை கடத்தினேனா?!'- நிபந்தனையோடு சூர்யா சிவாவுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

'நான் பேருந்தை கடத்தினேனா?!'- நிபந்தனையோடு சூர்யா சிவாவுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
'நான் பேருந்தை கடத்தினேனா?!'- நிபந்தனையோடு சூர்யா சிவாவுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

தனியார் பேருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

திமுக மாநிலங்களவை குழுத் தலைவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலராக உள்ளார். இதனிடையே, கடந்த ஜூன் 1-ம் தேதி இவரது கார் மீது தனியார் பேருந்து மோதியது. இதில் அவரது கார் சேதமடைந்ததாக தெரிகிறது. ஆனால், அவரது காரை சீரமைப்பதற்கான செலவுத் தொகையை தனியார் பேருந்து நிறுவனம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அந்நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு பேருந்தை ஜூன் 19-ம் தேதி சூர்யா சிவா கடத்திச் சென்றதாக புகார் எழுந்தது. இதன்பேரில் வழக்கு பதிவு செய்த திருச்சி கன்டோன்மென்ட் போலீசார் சூர்யா சிவாவை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி சூர்யா சிவா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "பேருந்து மோதி சேதமடைந்த எனது காரை சீரமைப்பதற்கான செலவு தொகை ரூ.5.40 லட்சத்தை சர்வீஸ் சென்டருக்கு வழங்க முதலில் தனியார் பேருந்து நிறுவனத்தினர் சம்மதம் தெரிவித்தனர். அதன் பிறகு பணம் தர மறுத்துவிட்டனர். சர்வீஸ் சென்டர் உரிமையாளர் என்னிடம் போனில் பேசி, மொத்த செலவில் 60 சதவீத பணத்தை செலுத்துமாறு கூறினார்.

இதையடுத்து நான் பேருந்து நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டேன். அதற்கு அவர் பணத்துக்கு உத்தரவாதமாக தங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றை என் இடத்துக்கு அனுப்பி வைப்பதாகவும், பணத்தை செலுத்திய பிறகு பேருந்தை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். அதன்படி பேருந்து ஒன்றை என் இடத்துக்கு அனுப்பியும் வைத்தார். அப்படித்தான் தனியார் நிறுவன பேருந்து என் இடத்துக்கு வந்தது. ஆனால் பேருந்தை நான் கடத்தியதாக ஆளுங்கட்சியினர் தூண்டுதல் பேரில் போலீஸார் என்னை கைது செய்துள்ளனர். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், "சூர்யா சிவாவுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான இருநபர் பிணையம் வழங்க வேண்டும். தினமும் காலை 10.30 மணிக்கு திருச்சி கண்டோண்ட்மெண்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்" என்ற நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com