ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள் வாக்கு சொல்வதாகக் கூறி பலரிடம் 70 பவுன் நகைகளை மோசடி செய்ததாக கணவனை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள மனைவியை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர்கள் தங்கமாயாள் - பாலமுருகன் தம்பதியர். பாலமுருகன் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பென்னிங்டன் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததால் தனது வீட்டு அருகில் உள்ள முப்பிலிமாடன் சாமி கோயிலில் அருள்வாக்கு சொல்லும் பழனிகுமார் என்பவரிடம் திருநீறு வாங்கியுள்ளார். பின்னர் கடை நன்றாக நடக்கவில்லை என்பதால் மீண்டும் திருநீறு கேட்டுள்ளார். அதற்கு பழனிகுமார் அவர்களிடம் உள்ள தங்க நகைகளை பூஜையில் வைக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இதையடுத்து தங்கமாயாள் தன்னிடம் இருந்த 26 பவுன் நகைகளை கொடுத்துள்ளார். ஆனால், பழனிகுமார் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவரும் நகையை மீண்டும் தங்கமாளாளிடம் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதேபோல் ஆலம்பட்டியைச் சேர்ந்த முருகேசன், மதிவாணன் மனைவி ராஜலக்ஷ்மி, மங்காபுரம் மாடசாமி மகன் ராமேஸ்வரன், பெருமாள்பட்டி பொன்னுச்சாமி மகன் கௌதமன் உட்பட பலரிடம் சுமார் 70 பவுன் நகைக்கு மேல் பழனிகுமார் ஏமாற்றியதும் தெரிய வந்ததை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் தங்கமாயாள், பழனிகுமார் மீது புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து டிஎஸ்பி சபரிநாதன் உத்தரவுபடி நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பழனி குமாரின் மனைவி ரம்யாவை தேடி வருகின்றனர்.