நாகையில் இலங்கை வாலிபருக்கு 2 ஆண்டுகளாக சித்ரவதை ?
நாகை அருகே நாலுவேதபதி கிராமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த வாலிபர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார்.
இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த டான் போஸ்கோவின் மகன் ரமேஷ். இவர் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தங்கம் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாலுவேதபதி கிராமத்தில் வசிக்கும் பிரபாகரன், மகேஸ்வரன், வடிவேல், ஆனந்தஜோதி ஆகியோருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ரமேஷை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல், அந்த நான்கு பேரும் நாலுவேதபதி கிராமத்தில் அடைத்துவைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதுதொடர்பாக உளவுத்துறையினர் கடலோர காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இந்தநிலையில் கடலோர காவல் குழும போலீசார் சினிமா பாணியில் இலங்கையில் இருந்து பேசுவதுபோல, தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் நான்கு பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் இலங்கையைச் சேர்ந்த வாலிபர் ரமேஷை மீட்டு, அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா கடத்தி செல்வது அல்லது தங்கக்கட்டிகள் கடத்தும் கும்பலில் சம்பந்தமுடையவர்களா? அல்லது வேறு ஏதும் சதி வேலைகளில் சம்பந்தம் உடையவர்களா? என பல கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.