இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி இருவர் கைது

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி இருவர் கைது
இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி இருவர் கைது

தேடப்பட்டு வந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி ஒருவர் உட்பட இருவர் பெங்களூருவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தங்களின் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு கொடுத்துள்ளது. தற்போது இவர்களை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், கோவை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்த அங்கொட லொக்கா, கோவை மாவட்ட சேரன்மாநகர் பகுதியில் பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் ரகசியமாக வசித்து வந்தார். திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கொடா லொக்கா, 2020 ஜூலை 4ல் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் சிலர், கோவை அரசு மருத்துவமனையிலிருந்து போலி சான்றிதழ் கொடுத்து, அவரது சடலத்தை பெற்றுக்கொண்டு சென்று மதுரையில் தகனம் செய்தனர்.

முதலில், இவ்வழக்கை பீளமேடு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில், சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அம்மானி தான்ஜி முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அங்கொட லொக்காவிடம் கைத்துப்பாக்கி இருந்ததாகவும், அது அவரது கூட்டாளியால் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் விசாரணையில் வழக்கறிஞர் சிவகாம சுந்தரி வாக்குமூலம் அளித்திருந்தார். அது தொடர்பாக விசாரித்து வந்த சிபிசிஐடி காவல்துறையினர், அங்கொட லொக்கா, இந்தியாவில் அவர் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகள் ஆகியோர் பெங்களூருவில் பதுங்கியிருக்கும் தகவல் அறிந்து, டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து பெங்களூருவுக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பெங்களூரு காவல்துறை உதவியுடன் பெங்களூருவின் குள்ளப்பா சர்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த, இலங்கை அதுரகிரியாவை சேர்ந்த சனுக்கா தனநாயகா(வயது 38), பெங்களூரு சுப்பையா பாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 46) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். கடந்த 12 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இருவரையும் 13 ஆம் தேதி கோவைக்கு அழைத்து வந்து, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் இல்லத்தில் ஆஜர்படுத்தினர். இருவரும் நீதிமன்ற காவலில் பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த சனுக்கா தனநாயகா, தமிழகத்தை சேர்ந்தவரும் பெங்களூருவில் வசித்துவருபவருமான கோபாலகிருஷ்ணன் உதவியுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர் போன்ற ஆதார் அட்டையுடன் நன்னன் என்கிற பெயரில் வசித்து வந்துள்ளார். கோபாலகிருஷ்ணன் சகோதரி வீட்டில் இவர் தங்கி வந்துள்ளார். இதனால், கோபாலகிருஷ்ணன் சனுக்கா தனநாயகாவிற்கு அடைக்கலம் கொடுத்ததற்காக கைது செய்யப்படுகிறார். ஏற்கனவே, கடந்த 6 மாதத்திற்கு முன் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு பிணையில் வந்தவர் இந்த கோபாலகிருஷ்ணன்.

அங்கொட லொக்கா கைத்துப்பாக்கி தொடர்பாகவும், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தது தொடர்பாகவும் விசாரணை செய்ய சனுக்கா தனநாயகாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல், தொடர்ச்சியாக இலங்கை போதைப்பொருள்காரர்களுக்கு, அங்கொட லொக்கா கூட்டாளிக்கும் அடைக்கலம் கொடுப்பதன் சட்டவிரோதமாக பணம் பயன் அடைகிறாரா என்பது குறித்து விசாரிக்க கோபாலகிருஷ்ணனையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்துள்ளது. இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க 7 நாட்கள் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை மனு மீதான விசாரணை வருகிறது.

முன்னதாக, அங்கொட லொக்கா உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் 2 வழக்குகள் பதிவு செய்திருந்தனர். ஒன்று, உயிரிழந்த அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பாகவும், மற்றொருன்று போலி ஆவணங்கள் தயாரித்து தமிழ்நாட்டில் தங்கியிருந்தது தொடர்பாகவும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதல் வழக்கு தொடர்பாக உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனையில் உடலில் விஷம் எதுவும் இல்லை என்றும், மரணம் இயற்கையானது தான் என தெரியவந்துள்ளதை அடுத்து, முதல் வழக்குக்கு தீர்வு எட்டியுள்ளது. உயிரிழந்த நபர் அங்கொட லொக்காவாக இருக்கும் பட்சத்தில், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை ஊடகங்களால் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டு வந்தததற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவரது அடையாளம் குறித்த சந்தேகம் டி.என்.ஏ., முடிவில் வெளிவரும் பட்சத்தில், சிபிசிஐடி 2வது வழக்கான போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவில் தங்கியிருந்தது தொடர்பான ஆதாரங்களை திரட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். அந்த பணியில் தான் தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com