திருப்பூர்: தாய் தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகன்... விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை

ஊத்துக்குளி அருகே தாய் - தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு திருடர்கள் தாக்கியதாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.
Criminal
Criminalpt desk

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அந்தியூர் அத்தாணியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி (55) ரேணுகாதேவி (42) தம்பதியர். இவர்களது மகன் கார்த்தி (21). இவர்கள் மூவரும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஒத்தப்பனை மேடு பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரது தோட்டத்து வீட்டில் குடியேறியுள்ளனர். இவரிடம் கார்த்தி பொக்லைன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கிணற்றுக்குள் இருந்து “என்னை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...” என்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது, தோட்டத்தில் இருந்த சகுந்தலா என்பவர் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது அங்கு கார்த்தி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளார். இதையடுத்து கார்த்தி குடியிருக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு கார்த்தியின் தாய் ரேணுகாதேவி சடலமாகவும், தந்தை கிருஷ்ணமூர்த்தி தலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.

Mother
Motherpt desk

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சகுந்தலா, ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிணற்றில் இருந்த கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ரேணுகா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கார்த்தியின் தந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கார்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், 'நேற்று முன்தினம் நள்ளிரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. நான் வெளியே வந்து பார்த்தேன். அப்போது 2 பேர் பொக்லைன் பேட்டரிகளை கழட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது இருவரும் என்னை தாக்கி கிணற்றுக்குள் தூக்கி வீசினர். அதற்கு பிறகு நடந்த சம்பவம் எதுவும் எனக்குத் தெரியாது' என்று கூறியுள்ளார்.

criminal
criminalpt desk

இதைத் தொடர்ந்து கார்த்தியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், கார்த்தி தனது பெற்றோரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்ததும், அவரே கிணற்றில் குதித்து திருடர்கள் தாக்கியதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com