சொந்த நகை கடையில் கைவரிசையை காட்டிய உரிமையாளரின் மகன்: 14 கிலோ தங்கம் மீட்பு

சொந்த நகை கடையில் கைவரிசையை காட்டிய உரிமையாளரின் மகன்: 14 கிலோ தங்கம் மீட்பு
சொந்த நகை கடையில் கைவரிசையை காட்டிய உரிமையாளரின் மகன்: 14 கிலோ தங்கம் மீட்பு

சொந்தக் கடையிலேயே கைவரிசையை காட்டிய நகைக்கடை உரிமையாளரின் மகனை போலீஸார் கைது செய்தனர். 

சென்னை சவுகார்பேட்டையில் சங்கம் கிராஃப்ட் என்ற தங்க நகைக்கடை இயங்கி வருகிறது. இக்கடையை ராஜ்குமார், சுபாஷ் போத்ரா ஆகியோர் இணைந்து கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். வார நாட்களான செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தங்க நகைகளை வாடிக்கையாளர்களுக்கு காட்டி அவற்றை மீண்டும் லாக்கரில் வைப்பது வழக்கம். அதே போல கடந்த 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாடிக்கையாளர்களுக்கு நகைகளை காட்டிவிட்டு 14 கிலோ எடையுள்ள தங்க நகைகளை லாக்கரில் பூட்டி விட்டு சென்றனர்.

25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை காட்டுவதற்காக லாக்கரை திறந்தபோது உள்ளே 14 கிலோ நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக கடையின் உரிமையாளர்கள் ராஜ்குமார், சுபாஷ் இருவரும் யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திய போது நிறுவனத்தின் மற்றொரு உரிமையாளரான சுபாஷ் போத்ராவின் மகன் ஹரீஷ் போத்ராதான் நகைகளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து ஹரீஷ் போத்ராவை யானைகவுனி காவல்-துறையினர் கைது செய்தனர். திருடிய தங்க நகைகளில் 12 கிலோ தங்க நகைகள் வியாபாரிகளுக்கான லாக்கரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், கடையில் வைத்திருந்த 2 கிலோ நகைகளையும் பறிமுதல் செய்தனர். 

ஆன்லைன் டிரேடிங் தொழில் நடத்தி வந்த ஹரீஷ் போத்ரா, அதில் பெரும் நஷ்டம் வந்ததால், பெற்றோருக்குத் தெரியாமல் நஷ்டத்தை ஈடுகட்ட சொந்தக் கடையில் கைவரிசை காட்டியுள்ளார். தந்தை சுபாஷ் போத்ரா நகைக்கடை லாக்கரின் சாவியை வீட்டிற்கு எடுத்து வந்ததும் அந்த சாவியை எடுத்து கொண்டு நகைகளை திருடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சொந்தக்கடையிலேயே கைவரிசையை காட்டிய ஹரீஷ் போத்ராவை கைது செய்த யானைகவுனி காவல்துறையினர் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com