மரித்துப்போன மனசாட்சி |மதுபோதையில் தாயை அடித்துக் கொன்ற கொடூர மகன்!
ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ருக்குமணி. இவர் தனது மகன் ரவிக்குமாருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ருக்குமணி வீட்டில் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் ருக்குமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அந்த பகுதியில், போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது, அங்கு வந்த ருக்மணியின் மகன் ரவிக்குமார் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளார்.. இதனை சுதாரித்து கொண்ட போலீசார் ரவிக்குமாரை விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்..விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர் கூறியுள்ளார்..
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ருக்குமணிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் தனது பங்கை கொடுக்க வேண்டும் என ரவிக்குமார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் .இதற்கு ருக்குமணி சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார் நேற்று மித மிஞ்சிய மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ருக்குமணியை கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
அதே சமயம் அவரது இரு கைகளையும் உடைத்து சித்திரவதை செய்துள்ளார்.இந்த கொடூர தாக்குதலில் ருக்குமணி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் போதை தலைக்கேறியதால் ரவிக்குமார் தாயின் சடலத்திற்கு அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார். மறுநாள் காலை அங்கிருந்து வெளியே புறப்பட்டுச் சென்ற ரவிக்குமார் மீண்டும் வீடு திரும்பிய போது, போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், ருக்மணியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 60 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. பின்னர், ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்..