தேவகோட்டையில் மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டார்.
தேவகோட்டை தாணூச்சாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். லாரி ஓட்டுனரான இவருக்கு செல்வி என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், பாலமுருகனுக்கும், செல்விக்கும் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்துள்ளது. இதனால் செல்வி தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு அடிக்கடி சித்தானூர் சமத்துவபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிடுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை கணவனுடன் தகராறு ஏற்பட்டு செல்வி தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து நேற்றிரவு பாலமுருகன் தனது மனைவி செல்வியை மது போதையில் சென்று, வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். மது போதையில் இருந்த பாலமுருகனிடம் மாமனார் பூமிநாதன், மகளை காலையில் அனுப்புவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமனார் பூமிநாதனை குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து தடுக்க முயன்ற மனைவி செல்விக்கும் மாமியார் முனியாத்தாளுக்கும் கத்தி குத்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த செல்வி, சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், முனியாத்தாள் தேவகோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.