அரக்கோணம் அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன்- மீனாட்சி தம்பதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு மொத்தமாக 3 பெண் குழந்தைகள். முதல் குழந்தைக்கு வயது 7 ஆகிறது. இவரது உறவினர் சங்கர். திருமணமான இவர் அதே பகுதியில் நெசவு கூலி தொழிலாளியாக உள்ளார். சம்பவத்தன்று மீனாட்சியின் முதல் குழந்தையை சங்கர் ‘கடைக்கு போகலாம்’ என அழைத்திருக்கிறார். மீனாட்சியும் உறவினர்தானே என நினைத்து சிறுமியை சங்கருடன் தைரியமாக அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் 1 மணி நேரம் தாண்டியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனிடையே மேட்டுப்பகுதி அருகே மறைவான பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்ற சங்கர் அங்கு வைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கிறார்.
பின்னர் வீடு அருகே சிறுமியை இறக்கிவிட்ட சங்கர் அங்கிருந்து ஓடிவிட்டார். சிறுமி நடந்ததை தனது தாயிடம் சொல்லியிருக்கிறாள். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சரவணன் குடும்பத்தினர் சங்கர் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். ஆனால் சங்கரின் உறவினர்கள் சரவணன் குடும்பத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. குழந்தைக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததோடு மிரட்டவும் செய்கிறார் என வேதனையடைந்த சரவணனின் மனைவி மீனாட்சி இதுகுறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சங்கரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.