’எங்க சார் அப்படி பண்ணிருக்க மாட்டாரு’ - ஆசிரியருக்காக வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்!

’எங்க சார் அப்படி பண்ணிருக்க மாட்டாரு’ - ஆசிரியருக்காக வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்!
’எங்க சார் அப்படி பண்ணிருக்க மாட்டாரு’ - ஆசிரியருக்காக வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்!

பொன்னேரியில் தனியார் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சமூக அறிவியல் ஆசிரியரான ஆரோக்கியராஜ் (48) என்பவர் பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆரோக்கியராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மாணவியின் பெற்றோர் புகார் அளித்ததால் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் ஆரோக்கியராஜை கைது செய்து சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஆசிரியர் ஆரோகியராஜுக்கு ஆதரவாக அப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். அத்துடன் ஆசிரியர் ஆரோக்யராஜ் மீது திட்டமிட்டு பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறியும், அவரை உடனே விடுவிக்க வேண்டும் மற்றும் அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர், ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் தரப்பு விளக்கத்தை வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தியத்தையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சம்பவம் தொடர்பாக பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் நேரடியாக சென்று பள்ளி நிர்வாகத்திடமும், அங்கு பயிலும் மாணவர்களிடமும் விசாரணை நடத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com