போதை மருந்து கொடுத்து 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மருத்துவ கல்லூரி மாணவர், சினிமா நடிகர் உட்பட நான்கு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ராமாபுரத்தில் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 13 வயது சிறுமி, வீட்டிற்கு அருகேயுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் பாட்டி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் சிறுமி வீட்டருகே உள்ள கடையில் தினமும் பானிபூரி சாப்பிட்டு சென்றுள்ளார்.
அப்போது, தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்கும் மாணவர் வசந்தகிரிஷ் (20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடியை வாங்கிய மருத்துவ மாணவன் அவருடன் தினமும் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது.
இதை தனக்குச் சாதமாக மாற்றி கொண்ட வசந்தகிரிஷ் தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறுமியை பாலியல் கொடுமை செய்ததை வசந்தகிரிஷ், அவரது நண்பர்களான சதீஷ்குமார், விஷால், தனியார் கல்லூரி பகுதி நேர உதவி பேராசிரியர் பிரசன்னா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் வசந்தகிரிஷின் நண்பர்கள் சிறுமியிடம் உனக்கும், வசந்துக்கும் இடையே நடந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருக்க தங்களுடனும் இருக்குமாறு மிரட்டல் விடுத்ததுடன் இன்ஸ்டாகிராமிலும் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று சிறுமியை வசந்தகிரிஷின் குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற 4 பேரும் அவருக்கு ஹூக்கா எனும் போதை பொருளை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி பதற்றத்துடன் பயந்தது போல் இருந்ததால் சந்தேகமடைந்து அவரிடம் விசாரித்ததாகவும், அப்போது சிறுமி நடந்த உண்மைகளை தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து வடபழனி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவ கல்லூரி மாணவர் வசந்தகிரிஷ் (20), சினிமா துணை நடிகர் சதீஷ்குமார் (22), விஷால் (19), கல்லூரி உதவி பேராசிரியர் பிரசன்னா (32) ஆகிய நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்ட போலீசார் அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். 13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.