கோவையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்களை கோவை உக்கடம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் குட்கா பொருட்கள் கடத்தியதாக மூன்று பேரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா, போதை ஊசிகள், போதை மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்குவதற்காக நான்கு சக்கர சரக்கு வாகனத்தில் கடத்துவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து கோவை உக்கடம் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். இதில் சுமார் ஒரு டன் எடையுள்ள குட்கா பொருட்களை கடத்தி வந்த சரக்கு வாகனத்தையும், ஒரு டன் எடையுள்ள குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
குட்கா பொருட்களை கடத்தி வந்ததாக கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆஷிக், மொய்தீன், தேவேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்து, எங்கிருந்து இந்த தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது என்றும் மேலும் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.