சீர்காழி கொள்ளை: 12.5 கிலோ நகை பறிமுதல்; காட்சிப்படுத்தப்பட்ட நகை, ரொக்கம், துப்பாக்கிகள்!

சீர்காழி கொள்ளை: 12.5 கிலோ நகை பறிமுதல்; காட்சிப்படுத்தப்பட்ட நகை, ரொக்கம், துப்பாக்கிகள்!
சீர்காழி கொள்ளை: 12.5 கிலோ நகை பறிமுதல்; காட்சிப்படுத்தப்பட்ட நகை, ரொக்கம், துப்பாக்கிகள்!

சீர்காழியில் தங்க நகை வியாபாரி தன்ராஜ் சவுத்ரி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் துப்பாக்கிகளை காவல்துறையினர் காட்சிப்படுத்தினர்.

கொலையாளிகளிடமிருந்து 12.5 கிலோ தங்க நகைகள், 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் அரிவாள், இரண்டு டம்மி துப்பாக்கிகள் ஒரு ஏர்கன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குற்றம் நடைபெற்று நான்கு மணிநேரத்திற்குள் கொள்ளையர்களையும், கொள்ளையடித்த நகைகளையும் பிடித்த காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா பாராட்டு தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்திற்கு வந்த மயிலாடுதுறை எஸ்.பி.ஸ்ரீ நாதா, இரட்டை கொலை மற்றும் தங்கநகை கொள்ளை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கநகைகள், பணம், அரிவாள், கத்தி, துப்பாக்கிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:

சீர்காழியில் நேற்று முன்தினம் கொடூரமான குற்ற நிகழ்வு நடந்துள்ளது. சீர்காழி ரயில்வே ரோட்டில் வசிக்கும் தன்ராஜ் சௌத்ரி வீட்டில் புகுந்த வடமாநில கொள்ளையர்கள் தாய், மகனை கொலை செய்துவிட்டு 12.5 கிலோ தங்கநகைகள் மற்றும் ரூ. 6.75 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தன்ராஜ்க்கு சொந்தமான காரில் தப்பிச் சென்றனர்.

அப்போது காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்ட கொள்ளையர்கள் காரை பட்டவிளாகம் கிராமத்தின் மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு வயல்வெளியில் புகுந்து அங்குள்ள சவுக்குதோப்பில் நுழைந்துள்ளனர். இதைக்கண்ட கிராமமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தை சுற்றி வளைத்த போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனீஷ், ரமேஷ் பாட்டில், மஹிபால் ஆகிய மூவரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதில் தங்க நகைகளை மறைத்து வைத்திருந்த இடத்தை கண்டுபிடிக்க கொள்ளையன் மஹிபாலுடன், இன்ஸ்பெக்டர் செல்வம், போலீசார் சுதாகர், முகமதுசாலீக் ஆகியோர் சவுக்கு தோப்பிற்கு சென்றனர். அப்போது, நகைகளை காண்பித்த மஹிபால் நகை பையின் கீழ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுதாகர், முகமதுசாலீக் ஆகியோரை தாக்கி, துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பிக்க முயன்றார். அப்போது இன்ஸ்பெக்டர் செல்வம், மஹிபாலனை துப்பாக்கியால் சுட்டார்.

இதனையடுத்து பிடிப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை, கொள்ளை வழக்கில் கும்பகோணத்தை சேர்ந்த பூர்விகம் ராஜஸ்தானை கொண்ட கருணாராம் என்பவர் குற்றவாளிகளை தனது காரில் அழைத்துக்கொண்டு புறவழிச் சாலையில் இறக்கிவிட்டு காத்திருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் மனீஸ், ரமேஷ் பாட்டில், கருணாராம் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்து சீர்காழி கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கொலையாளிகளிடமிருந்து 12.5 கிலோ தங்கநகைகள், ரூ. 6.75 லட்சம் பணம் மற்றும் அரிவாள், டம்மி துப்பாக்கி 2, ஏர்கன் 1 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தன்ராஜ் சௌத்ரி பதற்றத்தில் 17 கிலோ நகை கொள்ளை போனதாக தெரிவித்திருந்தார். ஆனால் 12.5 கிலோ தங்க நகைகள் மட்டுமே கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் அதிகளவு நகைவணிக கடைகள் உள்ளது. இந்த கடைகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தப் படவேண்டும் அதற்கான டிவிஆர் பதிவு கருவியை வேறு இடத்தில் வைத்து கண்காணிக்கவேண்டும். நகைக் கடைகளில் கட்டாயம் இரவு நேர காவலாளிகளை நியமிக்கவேண்டும் என கூறினார்.

மேலும் குற்றச் சம்பவம் நடந்து நான்கு மணிநேரத்திற்குள்ள கொள்ளையர்களையும், கொள்ளையடித்த நகைகளையும் பிடித்த ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், தனிப்படை சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசார் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com