கள்ளக்குறிச்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.91 லட்சம் மோசடி! இருவர் கைது
உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (52) என்பவர் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகாரொன்று அளித்துள்ளார். அதில், “சென்னையை சேர்ந்த சிவா மற்றும் ரமேஷ் என்பவர்கள் எலவனாசூர்கோட்டை பகுதியைச் சேர்ந்த 73 நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 91,54,600 ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றிவிட்டனர்” என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகத்துக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விசாரணை செய்ததில் சென்னை, தண்டையார்பேட்டை சேர்ந்த சிவா (40) மற்றும் பாடியநல்லூர் ரமேஷ் (49) என்பவர்கள் எலவனாசூர்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 73 நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கரூர் வைசியா வங்கி மூலம் 91,54,600 ரூபாய் பணத்தை பரிவர்த்தனையாக பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தராமலும் மேலும் கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியது உறுதியானது.
இதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். இதைத்தொடர்ந்து “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
