சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் கைதாகியிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர், தங்களின் ஜாமீன் மனுவில் ‘இவ்விவகாரத்தில் உயிரிழந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ், எங்கள் விசாரணையின்போது இறக்கவில்லை. அவர்கள் வீசிங் மற்றும் இதயத்தில் ஏற்பட்ட சிக்கலினால்தான் இறந்தார்கள். மருத்துவமனை செல்லும் வழியில்தான் அவர்கள் இறந்தனர். இவ்வழக்கில் வெளிப்படையான தன்மை இல்லை. எனவே வழக்கு விசாரணையை சில காலம் ஒத்திவைக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். 

மனுவை விசாரித்தபின்பு நீதிபதிகள் தரப்பில், ‘நீங்கள் எதுவும் செய்யவில்லை எனில், அவர்கள் ஏன் கஸ்டடியிலிருந்து விடுவிக்கப்படவில்லை? அவர்கள் உடலில் காயம் இருந்ததாக கூறும் பிரேத பரிசோதனையின் பின்னணி என்ன? அவர்களை யார் காயப்படுத்தினார்கள்?’ என்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.

இந்த ஜாமீன் மனுவை எதிர்த்து, இறந்த இருவரின் குடும்பத்தினர் சார்பிலும் வாதிடப்பட்டது. அவர்கள் தரப்பில், ‘இவ்விவகாரத்தில், காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரு பெண் அதிகாரிகளே இவர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் இன்னும் நீதிமன்றத்தால் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. அவர்கள் விசாரிக்கப்படும் வரையில், இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று கூறினர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘வழக்கில் விசாரணை நடந்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. எவ்வித மாற்றமும் செய்ய விரும்பவில்லை’ எனக் கூறினர். ஒத்திவைப்பது தொடர்பான கோரிக்கைக்கு பதிலளிக்கையில், ‘நாங்கள் ஜாமீன் வழங்க முடியாது. அப்படியிருந்தும் உங்களுக்கு வழக்கு ஒத்திவைப்பு தேவைதானா? அப்படி நாங்கள் ஒத்திவைத்தால், நீங்கள் கூடுதல் நாள்கள் சிறையில் இருக்க நேரிடும். அதற்கு உங்களுக்கு சம்மதமா?’ எனக் கேட்டனர். நீதிபதியின் கேள்விக்கு அவர்கள் வேண்டாமென கூறியதை தொடர்ந்து, வழக்கு ஒத்திவைப்பும் நிராகரிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com