சேலம்: கத்தியைக் காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்ததாக 2 பேர் கைது

சேலம்: கத்தியைக் காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்ததாக 2 பேர் கைது
சேலம்: கத்தியைக் காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்ததாக 2 பேர் கைது

ஓமலூரில் போலீசாரை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக இரண்டு ரவுடிகளை ஓமலூர் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. சேலம் மத்திய சிறையில் இருந்து குற்றவாளிகளை போலீசார் வாகனத்தில் அழைத்து வந்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து மீண்டும் அவர்களை வாகனத்தில் ஏற்றி சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது ஓமலூர் பேருந்து நிலையம் அருகே வாகனம் சென்றபோது, வாகனத்தை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இரண்டு பேர் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். பின்னர், இருவரும் வாகனத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை பார்த்து ஆபாசமாக திட்டி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும், "வாகனத்தை நிறுத்தச் சொன்னா நிறுத்த மாட்டீர்களா? உங்கள் எல்லோரையும் கொல்லாமல் விடமாட்டோம்" என்று கத்தியை காட்டியவாரே வாகனத்தில் ஏற முயன்றுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ரவுடிகள் இருவரையும் வாகனத்தில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து வாகனத்தில் வந்த சேலம் மல்லூர் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு தலைமை காவலர் ரகுபதி, ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் ஓமலூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சேலம் பெரியபுதூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அஜித்குமார், ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com