சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் துணை வேந்தராக பணியாற்றி வருபவர் ஜெகநாதன். சட்ட விரோதமாக அரசு நிதியை பயன்படுத்தி வர்த்தக ரீதியிலான நிறுவனத்தை இவர் தொடங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்கலைக்கழக தொழிலாளர்கள் நலச்சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர், துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே பியூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கியதாகவும், அதில் பல்வேறு நபர்களை பங்குதாரர்களாக இணைத்துக் கொண்டதாகவும், இதன் வாயிலாக பல்கலைக்கழக பெயரில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து ஊழலில் ஈடுபட்டதாகவும் துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 27 ஆயிரம் சதுர அடி கொண்ட இடத்தை வருடம் ஆயிரம் ரூபாய் என்ற அளவில் வாடகைக்கு விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. அரசின் நிதி மற்றும் அரசின் சொத்துக்களை சட்ட விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தி அதோடு மட்டுமின்றி வருவாய் ஈட்டும் நோக்கத்தோடு ஊழலில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.