ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் அமைந்துள்ள ஒரு முத்தூட் பைனான்ஸ் நகை அடகுவைக்கும் அலுவலகத்திற்கு ஊழியர்கள் காலை வழக்கம்போல் வந்திருக்கின்றனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 6 பேர் கொண்ட கும்பல், அலுவலகத்தின் மேனேஜர் உட்பட 6 ஊழியர்களை கட்டிப்போட்டு, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, லாக்கரின் சாவியை வாங்கி, அதில் வைக்கப்பட்டிருந்த 25,091 கிராம் தங்க நகைகளையும், 96 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த நகர காவல்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், பகல்நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியைப் பெற்று கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.