தென்காசி; வீடு விற்பது போல் நடித்து ரூ.45 லட்சம் அபகரிப்பு.. 5 பேர் கும்பல் கைது..
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கபூர். இவர் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் வீடு விலைக்கு வாங்க முயன்று வந்தார். அப்போது நன்னகரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நாகூர்மீரான் என்பவர் தனக்கு சொந்தமான வீடு உள்ளதாகவும் அதன் விலை ரூ.1.75 கோடி என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து வீட்டை வாங்குவதற்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக அப்துல் கபூர் உள்ளிட்ட சிலர் ரூ.45 லட்சத்துடன் தென்காசி அருகே உள்ள நன்னகரத்திற்கு வந்தனர். இதை அறிந்த நாகூர்மீரான் தலைமையிலான 5 பேர் கும்பல், இலஞ்சி குமாரர் கோவில் சாலையில் வைத்து ரூ.45 லட்சத்தை பறித்தது. அப்துல் கபூர் சத்தம் போட்டதால் கத்தியால் குத்தி விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
அதிர்ச்சியடைந்த அப்துல் கபூர் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தேடும் பணியை துவக்கினார். உடனடியாக மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிவகிரி செக்போஸ்ட் பகுதியில் அந்த கார்கள் வந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து குற்றாலம் போலீசார் அங்கு சென்று நாகூர் மீரான், இலங்கையை சேர்ந்த சதீஷ்குமார், மணிகண்டன், அணில் குமார், நசீர் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.45 லட்சம் பணம், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.