போலி ஆவணம் மூலம் ரூ. 2.2 கோடி மோசடி வழக்கு - தலைமறைவாக இருந்த இருவர் கைது
சென்னை தனியார் வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து 2.2 கோடி ரூபாய் வீட்டுக் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மேலும் இரு முக்கிய குற்றவாளிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை அபிராமபுரம் தனியார் வங்கிக் கிளை மூத்த மேலாளர் சுவாமிநாதன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2021 ஆம் ஆண்டு புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 2020 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த வாஞ்சிநாதன் - கிருத்திகா தம்பதியினர் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த குமார் என்பவரின் உதவியுடன் ராஜா அண்ணாமலைபுரத்தில் 1735 சதுர அடியில் இடம் உள்ளதுபோல் போலியான ஆவணங்களை தயாரித்து அதை வங்கியில் கொடுத்து வீட்டுக் கடனாக 2 கோடியே 20 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வங்கியை மோசடி செய்து ஏமாற்றியது தெரியவந்த நிலையில், போலி ஆவணம் மூலம் கடன் பெற்ற வாஞ்சிநாதன் கிருத்திகா தம்பதியர், கமலக்கண்ணன், ஸ்ரீதர் ஆகிய போலி ஆவணம் தயார் செய்பவர்கள், போலி ஆவணத்தை தம்பதியருக்கு பெற்றுக்கொடுத்த குமார், அதை பத்திரப்பதிவு செய்ய உதவிய திருவொற்றியூரைச் சேர்ந்த யமுனாராணி, ராமய்யா, இம்மானுவேல், எஸ்.பி.ஐ வங்கி அதிகாரியான பாலாஜி, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பரத் குமார் உள்ளிட்ட 9 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் மூளையாக செயல்பட்டு போலி ஆவணங்களை உண்மையானதுபோல் தயார் செய்து கொடுத்த கமலக்கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பல மோசடி வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான கொடுங்கையூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த செம்மஞ்சேரியைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் மதுரையில் வைத்து கைது செய்தனர்.
மேலும் அவ்விருவரும் மோசடி செய்த பணத்தில் வாங்கிய 4 சொகுசு கார்கள், 4.40 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை அழைத்து வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.