தப்பியோடிய தொழிலதிபர்கள் - பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கான சொத்துக்கள்

தப்பியோடிய தொழிலதிபர்கள் - பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கான சொத்துக்கள்
தப்பியோடிய தொழிலதிபர்கள் - பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கான சொத்துக்கள்

பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியிடம் இருந்து சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், விஜய் மல்லையா, நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியும் பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் மோசடி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தொகையில் கடந்த 15ஆம் தேதி வரை ரூ.19 ஆயிரத்து 11 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மோசடி செய்யப்பட்டுள்ள மொத்த நிதியில் 84.61 சதவிகிதமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோரிடமிருந்து 18,000 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் அரசுத் தலைமை வழக்கறிஞர் துஷர் மேத்தா, உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். கடந்த 2021 ஜூலை வரை விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் சோக்ஸி ஆகியோருக்கு சொந்தமான சுமார் 13,109 கோடி ரூபாய் மதிப்புமிக்க சொத்துகளை விற்றதன் மூலம் வங்கிகள் பெற்றதாக கடந்த 2021 டிசம்பரில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com