செங்கல்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்றவர்களை தடுத்த காவலரை அரிவாளால் திருடர்கள் வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய தலைமை காவலர் அருள் என்பவர் சாதாரண உடையில் பணியில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சுங்கச்சாவடி அருகே வந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பெற முயன்றுள்ளனர். அப்போது அதைக்கண்ட காவலர் அருள் அந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது திருட்டில் ஈடுபட்ட இருவர்களில் ஒருவனான சுதர்சன் என்பவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலரின் தோள்பட்டையில் வெட்டியுள்ளார். வெட்டிவிட்டு இருவரும் தப்ப முயன்றபோது விடாது துரத்திய காவலர் அருள் சுதர்சனை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
இதனையடுத்து காவலர் அருளுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சுதர்சனிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.